• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உரிமை மீட்பு குழுவினரின் போராட்டம்..,

BySeenu

May 29, 2025

கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 26 – வது வட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சாலையில் இயங்கி வரும் இந்துக்கள் மின் மயானம் மற்றும் உடல் அடக்கம் செய்யும் மயானத்திற்கு அருகில் குப்பை மாற்றும் கட்டமைப்பு அமைக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இத்திட்டத்தை கை விடக் கோரி பீளமேடு உரிமை மீட்புக் குழுவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்து உள்ளது. சமர்பன் மயானத்தைச் சுற்றிலும் 27 குடியிருப்புப் பகுதிகள் அமைந்து உள்ளன. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்கள் உடல்களை அடக்கம் செய்ய இந்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர். மயானப் பகுதிக்கு அருகிலேயே விடுதிகள், குடிநீர் தொட்டிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மயானம் அமைந்து உள்ள பகுதியில் குப்பை மாற்றும் கட்டமைப்பை உருவாக்க மாநகராட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவித்தும், அறவழிப் போராட்டங்களை நடத்தியும் மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில், மாநகராட்சி நிர்வாகம் ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் ஆட்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் குழி தோண்டத் தொடங்கியது. அப்போது, புதைக்கப்பட்டு இருந்த மனித எலும்புக் கூடுகள் வெளியே கொட்டப்பட்டது. இது அப்பகுதி மக்களின் உணர்வுகளை மிகவும் பாதித்து உள்ளது. தங்கள் உறவினர்களின் எலும்புக் கூடுகள் இறுதியஞ்சலி செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவை வெளியே எடுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்து உள்ளனர்.

மேலும், அப்பகுதியில் கட்டப்பட்டு இருந்த சமாதிகளை இடிக்க மாநகராட்சி முற்பட்ட போது, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதை தடுத்து நிறுத்தினர். எவ்வளவு போராட்டங்கள் மேற்கொண்டாலும் குப்பை கிடங்கு உருவாக்குவதில் மாநகராட்சி உறுதியாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு பீளமேடு உரிமை மீட்புக் குழு தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இத்திட்டத்தைக் கை விட்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், பா.ஜ.க, அதிமுக, தேமுதிக, இந்து மக்கள் கட்சி,இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,

பல ஆண்டுகளாக இங்கு இருக்கக் கூடிய இந்து மயானம் மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் இருந்து வந்தது. பொதுவாக தனியார் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படும் என்பதைத் தாண்டி இதை மாநகராட்சியே ஆக்கிரமிப்பு செய்கிறது. இந்துக்கள் மயானத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே குப்பைக் கிடங்காக மாற்றி உள்ளனர். மற்றொரு பகுதியில் மின் மயானம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு பகுதியில் வேறு சில அரசு வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த குப்பைகளை தரம் பிரித்து அகற்றக் கூடிய பணிக்காக குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலேயே ஏற்கனவே நானூறு லாரிகள் வீதம் குப்பை கொட்டுகிறது.

அருகிலேயே மிகப்பெரிய தண்ணீர் டேங்க் இருக்கிறது. மேலும் இந்த பெரிய குப்பைக் கிடங்கை விரிவுபடுத்தக் கூடிய நோக்கத்தோடு, மீதி இருக்கும் சிறிய இடத்தையும் இவர்கள் குப்பைக் கிடங்கிற்காக ஆக்கிரமித்துக் கொண்டால், அவர்கள் சுடுகாட்டிற்கு எங்கு செல்வார்கள் ? அப்படி இருக்கும் பொழுது மாநகராட்சி எதன் அடிப்படையில் இந்த குப்பைக் கிடங்கை இங்கு அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை.

இவர்கள் இப்படி செய்வதால் பொதுமக்கள் மிகுந்த இடையூறுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அந்த விரிவாக்கப் பணிகளுக்காக புல்டோசரை விட்டுத் தோண்டுகிறார்கள். அப்படித் தோண்டுகையில் உள்ளி இருந்து எலும்புக் கூடுகள் வெளியே வருகிறது. அப்படித் தோண்டும் போது ஒரு குழந்தையினுடைய பிணம் வெளியே வருகிறது. நிறைய பேர் திதி கொடுப்பதற்காக வருகிறார்கள், இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது, அப்படி வருகிறவர்களுக்கு ஏற்கனவே இந்த இடம் போதவில்லை. இங்கு நிறைய சமாதிகளும் கட்டப்பட்டு இருக்கிறது, இது இங்கு வாழக்கூடிய பொதுமக்களின் மனதை மிகவும் புண்படுத்துகிறது.

பலமுறை இங்கு போராட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு மாநகராட்சி செவி சாய்க்கவே இல்லை. நீதிமன்றத்திலும் இதற்காக போராட்டக் குழு அமைக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் அதில் ஈடுபட்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் இதற்கு தடையாணை வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இரவோடு இரவாக வந்து அடிக்கடி இவர்கள் வேலை செய்வது கவலை அளிக்கிறது. இங்கு வந்து இருக்கக் கூடிய பொதுமக்கள் அனைவர் சார்பாகவும் மாநகராட்சியின் இந்த செயலை கண்டிக்கிறோம். நீதிமன்றங்களுக்கு சென்று இந்துக்கள் மயானத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.