காரைக்குடி நகராட்சி பெண் ஊழியர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி சாலை பகுதியில் வசிப்பவர் உமா. நகராட்சி பணியாளரான உமா, உடல்நிலை சரியில்லாத தனது கணவர் வேலு மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் உமா தனது கணவர் மற்றும் மகளுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உமா உட்பட மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.