பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் பல்லடம் மங்கலம் சாலை அரசங்காடு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல்லடம் தாலுகா மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் ஆகியும் அவரது உடல் பிரத பரிசோதனை செய்யவில்லை என்றும், மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.