சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் சட்டவிரோதமாக அகற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தகவலின்படி, திருநீர்மலை பெரிய ஏரியில் இருந்து தினமும் சுமார் 500 லாரி அளவுக்கு மண் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அகற்றப்பட்ட மண் திருநீர்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குவித்து வைத்து, எந்தவித அனுமதியும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏரியில் இருந்து மண் தொடர்ந்து அகற்றப்படுவதால், நீர்நிலையின் இயற்கை அமைப்பு பாதிக்கப்படுவதுடன், மழைக்காலத்தில் நீர் சேமிப்பு திறன் குறையும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கோயில் நிலத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மண் திருட்டு சம்பவம் திருநீர்மலை பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






