• Sat. Apr 27th, 2024

கருணாநிதியின் நட்பை மட்டும் விரும்பிய தோழமை

முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக காரணமாக இருந்த கவுண்டம்பட்டி முத்து (96), வயதுமூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.

கலைஞரின் நட்பை மட்டும் தான் கடைசிவரை விரும்பினார். பதவிக்கு ஆசைப்படவில்லை!” என்று அவர் குறித்த நினைவுகளை அவரின் உறவினர்கள் உருக்கமாக அசைபோடுகிறார்கள். கருணாநிதி 1957-ல் குளித்தலை தொகுதியில் தன் முதல் தேர்தலைச் சந்திக்கவும், அங்கே அவர் 8,296 ஓட்டுகளில் ஜெயிக்கவும் காரணம் இந்த கவுண்டம்பட்டி முத்து தான். கலைஞரோடு அவருக்கிருந்த நெருக்கம், அவர் வெற்றிக்கு காரணமான அந்த விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் குறித்து கவுண்டம்பட்டி மக்கள் நம்மிடம் பேசினார்கள்.

இன்னைக்கு நங்கவரம், மேல நங்கவரம், சூரியனூர், காவகாரப்பட்டின்னு 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மூணு வேளைச் சோறு சாப்பிடுறாங்கன்னா, அதுக்கு காரணம் இந்த கவுண்டம்பட்டி முத்துவும், கலைஞரும் தான். நங்கவரம் பண்ணையை எதிர்த்து அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்தான்.


1956-ம் ஆண்டு இந்த கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்.ராமநாதய்யர், என்.ஆர்.ரெங்கநாதய்யர் ஆகிய இரண்டு பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாங்க. அதாவது, அந்தப் பண்ணையார்களுக்கு சொந்தமான 33,412 ஏக்கர் நிலங்களை இந்தத் பகுதி விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தாங்க. பல வருடங்களாக விவசாயிகள் பயன்பாட்டில் அந்த நிலங்கள் இருந்தன.

அப்போது, காமராஜர் ’60-க்கு 40-னு’ ஒரு சட்டம் போட்டார். அதாவது, நிலங்களின் உரிமையாளர்களுக்கு 60 சதவிகிதமும், உழுத விவசாயிகளுக்கு 40 சதவிகித நிலங்களையும் பிரிச்சு தரணும்ன்னு சொல்லிய சட்டம் அது. ஆனால், ராமநாதய்யர் அப்படிச் செய்யாமல், விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த அத்தனை நிலங்களையும் பிடுங்க முயன்றார். இதனால், விவசாயிகள் நங்கவரம் பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

1953-ல் இருந்து நடந்த வந்த அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து கவுண்டம்பட்டி முத்துதான். 1956-ல் இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. அப்போது, தி.மு.க-வின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த அன்பிலாரை கூப்பிட்ட அண்ணா, ‘கலைஞரை அழைத்துப் போய், நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்’னு சொன்னார்.

கலைஞர் களத்திற்கு வந்தார். நேராக வயல்களுக்கு 10,000 விவசாயிகளை திரட்டிட்டு போய், தானே ஏரைப் பூட்டி ஓட்டியதோடு, ‘உழுதவனுக்கே நிலம் சொந்தம்’, ‘நாடு பாதி நங்கவரம் பாதி’ என்று கோஷம் போட்டார். தொடர்ந்து, ஆறு நாள்கள் வயல்களிலேயே இருந்து கடுமையான போராட்டம் நடத்தினார். அதன் காரணமாக, மாவட்ட நிர்வாகமும், ராமநாதய்யரும் கவுண்டம்பட்டி முத்துவையும், கலைஞரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

அங்கே விவசாயிகள் சார்பாக இவர்கள் வைத்த கோரிக்கையை பண்ணையார் ஏத்துக்கிட்டார். இதனால், மூணு வருஷ விவசாயிகளின் உரிமை போராட்டம் முடிவுக்கு வந்தது. எத்தனையோ பொதுவுடைமை கட்சித் தலைவர்களின் போராட்ட வியூகங்களால் சாதிக்க முடியாத விஷயத்தைத் தங்கள் வீரியமான போராட்டத்தால் சாதித்துக் காட்டினார்கள், கலைஞரும், கவுண்டம்பட்டி முத்துவும்.


அதனால், 1957-ல் குளித்தலை தொகுதியில் நின்ற கலைஞரை இங்குள்ள மக்கள் வெற்றிபெற வைத்தனர். ‘உன்னால்தான் இந்த வெற்றி’னு அறிஞர் அண்ணாவும், கலைஞரும் சொன்னாங்க. எவ்வளவோ பதவி கொடுத்தும் கவுண்டம்பட்டி முத்து, ‘உங்க நட்பு ஒன்றே போதும் தலைவரே’னு மறுத்துட்டார். இருந்தாலும், கவுண்டம்பட்டி முத்துவின் இரண்டாவது மகனுக்கு, பி.ஆர்.ஓ பதவி கொடுத்து, தன் நன்றியை கலைஞர் வெளிப்படுத்தினார். அதேநேரம், கடைசி காலம் வரை கலைஞருக்கு உண்மையாக நண்பராகவும், கட்சியில் தொண்டராக மட்டும் இருந்து மறைந்திருக்கிறார், கவுண்டம்பட்டி முத்து” என்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *