சிறையில் உள்ள யூடியூப்பர் பப்ஜி மதனுக்கு, சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவியிடம் பேரம் பேசிய சிறைத்துறை சஸ்பெண்ட்.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர் பப்ஜி மதன். ஆன்லைன் விளையாட்டின் போது சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதனை கைது செய்தனர். தற்போது சென்னை, புழல் சிறையில் பப்ஜி மதன் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பப்ஜி மதன் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறையினர் லஞ்சம் கேட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் 3 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், ஆனால் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்பி வைத்ததாகவும் ஆடியோவில் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிருத்திகாவிடம் பேரம் பேசிய சிறைத்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.