• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சிஐஐ நடத்திய ‘நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச்..,

BySeenu

Feb 6, 2026

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ நடத்திய நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026 போட்டியில், நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் குழுக்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர்.

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள், இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII), நீலகிரி எகனாமிக் டயலாக் (NED) மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய ‘நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026’ (Nilgiris Impact Challenge 2026) என்ற போட்டியை நடத்தின.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகம் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியான தீர்வு காணும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 21 மாணவர் குழுக்கள் கலந்து கொண்டன.

சுற்றுலாப் பயணிகள் வருகையை நிர்ணயித்தல், ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் களைதல், பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 6 தலைப்புகளின் கீழ், நடைமுறைக்கு உகந்த தீர்வுகளை வெளிக்கொண்டு வந்த 6 மாணவர் குழுக்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதன் நிறைவு விழா குமரகுரு கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், போர்ஜ் அகாடமியின் (Forge Academy) முதன்மைத் திட்ட அதிகாரி பி.எல்.லட்சுமி மீரா பேசுகையில், “இது வழக்கமான போட்டிகளைப் போன்றது அல்ல. குறிப்பிட்ட இடத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ‘இடச் சார்ந்தக் கண்டுபிடிப்பு’ (Place-based innovation) முயற்சியாகும். திறம்பட தீர்வுகளை கூறிய மாணவர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.

சிஐஐ (CII) கோவை மண்டலத் தலைவரும், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் துரைசாமி பேசுகையில், “நீலகிரியின் மென்மையான சூழலியலைப் பாதுகாக்க நுண்ணிய மற்றும் சீரான கண்டுபிடிப்புகள் அவசியம். கல்வி நிறுவனம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்துறை ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும். மாணவர்கள் பொறியாளர்களாக மட்டும் இருக்காமல், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக மாற வேண்டும். உங்கள் கண்டுபிடிப்புகளை வெறும் முன்மாதிரியாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அவற்றை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக மாற்ற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக நீலகிரி எகனாமிக் டயலாக் முன்னெடுப்பைத் திறம்பட நடத்தி வரும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயருக்கு வாழ்த்துகள்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சூழலியல் ஆர்வர்லர்கள் கலந்து கொண்டனர்.