வாடகை வீட்டில் குடியிருந்த வயதான பெண்மணியை கோணி முட்டையில் கட்டி தூக்கி எறிந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் துளசி தெருவில் அமைந்துள்ள வாடகை வீட்டில் தனது இரண்டு மகன்கள் உடன் கடந்த பத்து வருடமாக வசித்து வருகிறார் வள்ளியம்மாள். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வீட்டின் உரிமையாளர் நீலகண்டன் மரணம் அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது மகளான மணிமேகலை என்பவரிடம் மாத மாதம் வாடகை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நான்தான் நீலகண்டன் மனைவி ராஜாத்தி என்ற பெண்மணி ஆறு அடியாட்களுடன் சேர்ந்து வந்து நீங்கள் உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த கொலை மிரட்டலுக்கு பயந்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவரது இளைய மகனான ராஜேஷ்குமார் புகார் அளித்துள்ளார். இது சம்பந்தமாக விசாரித்த எஸ்.ஐ ஆனந்தகுமார் என்பவர் நீங்கள் வீட்டை காலி செய்யுங்கள் மூன்று மாதம் கால அவகாசம் தருகிறோம் என்று கூறியுள்ளார்.
இதனை ஒப்புக்கொண்ட ராஜேஷ்குமார் வீடு திரும்பிய நிலையில் மறுநாள் காலை
எஸ். ஐ. ஆனந்தகுமார், ராஜேஷ்குமார் இல்லத்திற்கு வந்து உன்னை ஆய்வாளர் அழைத்தார் வா என்று காவல் நிலையம் அழைத்துச் சென்று பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினருக்கும் காவல் நிலையத்தில் இருந்து எந்த வித தகவலும் கொடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. சிறையில் அடைத்த மறுநாள் எஸ் ஐ ஆனந்தகுமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்கு சென்று வள்ளியம்மாள் என்ற வயதான பெண்மணியை வாயில் துணி வைத்து கட்டி கோணிப்பையில் கட்டி அடித்து முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்னர் வீட்டில் உள்ள துணி அவரது நகைகள், பாத்திரம், கேமராக்கள், பணம் மற்றும் மாற்று துணி கூட வைக்காமல் அனைத்து பொருட்களையும் ஒரு குட்டி யானை மூலம் ஏற்றி சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதனைப் பார்த்து அவரது மூத்த மகனுக்கு தகவல் தெரிவிக்க அவர் வந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட பூந்தமல்லி காவல் நிலையம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலம் மாற்று துணிக்கு கூட வழியில்லாமல் இருக்க இடமில்லாமல் வயதான பெண்மணி மற்றும் அவரது இரண்டு மகன்கள் ரோட்டோரத்தில் படுத்து தூங்கும் அவல நிலையில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் நியாயம் வேண்டி கோரி ஆவடி காவல் ஆணையரகம் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் நேற்று (09.07.25) கலந்து கொண்டு எனது பொருட்களை மீட்டுத் தரவும் என்னை கொலைவெறி தாக்குதலுடன் அடித்த காவல் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் செயல்பட்ட ஆறு நபர்களுக்கு தண்டனை பெற்று தருமாறும் எனக்கும் எனது மகனுக்கும் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறோம் இதற்கு தக்க நடவடிக்கை வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் இது போன்ற சம்பவங்களுக்கு துணை போவது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.