தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், 9-ந் தேதி வேட்புமனுவை வாபஸ் செய்ய கடைசி நாள் ஆகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அரசியல் கட்சியினர் மகிழ்ச்சியில் தங்கள் வேலையை தொடங்கி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவுளி கடைகளில் கட்சி கலர் துண்டுகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
ஜவுளி கடைகளில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தவெக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சி கலர் துண்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றை கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாளையம் ஜவுளிக்கடை உரிமையாளர் முத்தரசன் கூறியதாவது:-
தற்போது தேர்தல் வேலை சூடுபிடித்து உள்ளது. விரைவில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் தங்களின் கட்சி கலர் மற்றும் கட்சி சின்னம் பொறித்த துண்டுகளை அரசியல் கட்சி தொண்டர்கள் வாங்கி வருகின்றனர்.
தற்போது அதன் விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. மொத்தமாக துண்டு வாங்கினால் ஒரு துண்டு ரு 30க்கும் தனியாக வாங்கினால் ஒரு துண்டு ரூ 40க்கும் விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.




