


திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுகுமார்(18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுதேர்வு எழுதி முடித்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த 6-ம் தேதி சுகுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோடி படுகாயம் அடைந்தார்.
அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 433 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றிருந்தார்.
சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

