ஏப்ரல் 1 அன்று மன்மத லீலை, செல்ஃபி, இடியட், பூசாண்டி ஆகிய நான்கு நேரடி தமிழ் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 25 அன்று வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 550க்கும் மேற்பட்ட திரைகளில் ஓடிக்கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 510 திரைகள் மட்டுமே புதிய படங்களை திரையிட முடியும் நான்கு தமிழ் படம், ஒரு ஆங்கில படம் என ஐந்து படங்களுக்கிடையில் திரைகளை ஒப்பந்தம் செய்வதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
மன்மத லீலை படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியான பின்பு அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு திரையரங்குகள், இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. காரணம் படம் முழுக்க முத்த காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் பொங்கி வழிவதுதான். அத்துடன் படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் படத்தில் பெண்களை, பிகர்களை உஷார் செய்வது எப்படி என்பதை மன்மதலீலை படத்தில் கதாநாயகன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசியதுதான். அதன் காரணமாக திரையரங்குகளின் முதல் விருப்பமாக” மன்மதலீலை” உள்ளது இந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது
ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ள மன்மத லீலை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவரும் 10-வது படமாகும் ’இரண்டாம் குத்து’ படத்தை ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் வினியோக உரிமை பெற்றபோது அதற்கான தொகையில் ரூ. 2 கோடி ரூபாய் பாக்கிவைத்துவிட்டு படத்தை வெளியிட்டனர். இதுவரை அந்தப் பணத்தை இரண்டாம் குத்து படத்தை தயாரித்த ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு மன்மதலீலை படத்தை வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், மன்மதலீலை படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்திரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ரூபாய்30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் செலுத்த வேண்டுமெனவும் நிபந்தனை விதித்துள்ளார் நீதிபதி எம்.சுந்தர்..