உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார் பா.ஜ.கவின் தலைவர் அண்ணாமலை. அந்தவகையில் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தமிழகத்தில் கொலைக் குற்றங்களைத் தடுப்பதற்காக காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தமிழகஅரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பல மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில் தமிழக அரசு அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது.
எனவே மாணவர்களின் உயிரிழிப்பைத் தடுப்பதற்கு அவர்களை குழப்பாமல், திமுக அமைதியாக இருந்தாலே போதும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக் கூடிய அரசு, ஏன் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவர்களை கோயிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது? டாஸ்மாக்-க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட கோயில்களுக்குத் தரவில்லையே.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கடன்தள்ளுபடி கிடைக்கும். எனவே நகை அடமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகை கடன் பெற்றுக்கொள்ளுங்கள், திமுக ஆட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம் என உதயநிதி ஸ்டாலின்தான் பிரசாரம் செய்தார். ஆனால், இன்று முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் பேசும் போது ’வங்கிகளில் முறைகேடாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவிக்கிறார். நியாயப்படி பார்த்தால், முதலில் உதயநிதி ஸ்டாலின் மீது தான் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இதெல்லாம் திமுக அரசியலுக்காக போடுகின்ற நாடகம்” என்றார்.