தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தா. தனபாண்டியன், இன்று மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அவர் மேற்கொண்ட எதார்த்தமான அணுகுமுறை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது

இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் மேல அனுப்பானடி பகுதிக்கு வந்த தனபாண்டியன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் நுங்கு விற்றுக் கொண்டிருந்த ஒரு வியாபாரியைக் கண்ட அவர், அவரிடம் சென்று சகஜமாகப் பேசினார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வியாபாரியின் கையில் இருந்த கத்தியை வாங்கி, அவரே லாவகமாக நுங்கு வெட்டினார். பின்னர், அந்த நுங்கை அதே வியாபாரிக்கு பாசத்துடன் ஊட்டி விட்டது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வேட்பாளரின் இந்த எளிமையான செயலைக் கண்டு பொதுமக்கள் உற்சாகமடைந்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ தெருத்தெருவாகச் சென்ற வேட்பாளர், அங்கிருந்த பெண்களிடம் அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த அவர், வெற்றி பெற்றால் இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.



