• Sat. Feb 28th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அந்த நாள்… ஞாபகம்; நெஞ்சிலே வந்ததே…

போடியில் 50 ஆண்டுகளுக்கு முன் ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்த, 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒருவருக்கொருவர் சந்தித்து, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தேனி மாவட்டம், போடியில் ஜமீன்தார் காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1972ம் ஆண்டு பிளஸ் ஒன் வகுப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ் ஒன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (சங்கமம்) நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளர் செல்லத்துரை வகித்தார். துணைச் செயலாளர்கள் ரமேஷ்குமார், குமரேசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்வி போதித்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்குவது மற்றும் வேலை வாய்ப்புக்கான ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சையது இபராஹிம், துணைத் தலைவர் பாஸ்கரன் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து விடைபெற்ற அனைவரின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடியதை காணமுடிந்தது.