பீகார் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது பள்ளித் தோழியான ரச்சேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
டெல்லியில் உள்ள சைனிக் பண்ணை இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், தேஜஸ்வி தந்தை லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் திருமண சடங்குகளை மேற்கொண்டனர். தேஜஸ்வியின் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப், அவரது ஏழு சகோதரிகள் ஆகியோர் என நிகழ்வில் நெருங்கிய நபர்கள் மொத்தம் 50 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோரும் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.லாலுவின் பிள்ளைகளில் இளையவரான தேஜஸ்வி, லாலுவின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை பீகார் துணை முதலமைச்சராக இருந்தார் தேஜஸ்வி.
இவர் அரசியல் களத்திற்கு வரும் முன்னர் கிரிக்கெட் களத்திலும் செயல்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.