அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியர், கவிஞர் என பன்முக திறமை கொண்ட புலமை பித்தன் வயது முதிர்வினால் இன்று காலமானார்.
தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் புலமைபித்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புலமைபித்தன் இன்று காலை 9:30 மணியளவில் உயிரிழந்தார். பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் அவைத் தலைவரான ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற ‘நான் யார் நான் யார் நீ யார்?, இதயக்கனி படத்தில் ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சிரித்து வாழ வேண்டும், அடிமைப்பெண் படத்தில் ‘ஓராயிரம் நிலவே வா’ என முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் படங்களில் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். உன்னால் முடியும் தம்பி படத்தில் ‘நஞ்சை உண்டு புஞ்சை உண்டு’, நாயகன் படத்தில் தென்பாண்டி சீமையிலே, 16 வயதினிலே படத்தில் ‘சோளம் விதை’ ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி’ ஆகிய பாடல்களை எழுதியவர் புலமைப் பித்தன்.
2015ஆம் ஆண்டில் வடிவேலு நடித்த ‘எலி’ படத்திற்காக தனது கடைசி பாடலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.