நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தற்காலிக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
நெல்லை மருதகுளத்தில் தீயணைப்பு துறை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 145 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர். செப்டம்பர் 6- ந்தேதி பயிற்சி நிறைவு பெறுகிறது. அந்த மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன், அதுபோன்று மாவட்ட தீயணைப்பு நிலையத்தையும் பார்வையிட்டுள்ளேன். சேலம் ,கடலூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெல்லையில் விரைவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்மண்டல அலுவலகம் அமைக்கப்படும். தமிழகத்தில் தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு 1200 பேர் தேர்வு செய்யப்பட்டு 9 இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிறப்பப்படும். 15- வது நிதிக்குழு வின் மூலம் 343 கோடி ரூபாய் தீயணைப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நவீன எந்திரங்கள் வாங்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் புதியதாக 5 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மானூர், ராதாபுரம் ஆகிய பகுதியில் தீயணைப்பு நிலையம் திறப்பதற்கு திட்டம் உள்ளது என தெரிவித்தார். முன்னதாக நெல்லை மாநகர காவல் ஆணையர் அவிநாஷ்குமார், நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார், மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், துணை இயக்குனர், தீயணைப்பு துறை மற்றும் கணேசன் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர் மரியதை நிமித்தமாக தீயணைப்புத்துறை இயக்குனரை சந்தித்தனர்.