• Sat. Apr 27th, 2024

மாற்றத்திற்கு தயாராக இருங்கள் ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

வலைத்தளத்தில் வெளியானஜெய்பீம் படத்தின்வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் மார்ச் 10 ஆம் தேதி நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
எதற்கும் துணிந்தவன்’ டிரைலர் வெளியானதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை 10 மணிக்குநடைபெற்றது. அதில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ’’உக்ரைன் நாட்டில் எதுவும் அறியாத குழந்தைகள், பொதுமக்கள், இந்தியர்கள் என பலர் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். கொரோனா நிறைய விஷயங்களை புரட்டிப் போட்டுள்ளது. எனவே மனது சொல்லுவதை கேளுங்கள், மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.
என்னுடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அது உங்களுக்காகத்தான் இருக்கும். செய்யவேண்டியதை சரியான நேரத்தில் செய்யவேண்டும். அத்துடன் என்ன படம் எடுக்கின்றோமோ, அது மக்களுக்கான படமாகத்தான் இருக்கவேண்டும். அதைத் தொடர்ந்து செய்துவருகிறோம். அந்த வகையிலேயே இதுவரை யாரும் பேசாத விஷயத்தை ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் பேசியுள்ளோம். ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் ஒரு சிலருக்கு சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்பட்டன. அது தற்காலிக பிரச்னைதான். அதை சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். அந்த பிரச்னையில் என்னுடைய ரசிகர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை இந்த வயதிலும் பக்குவத்துடன் கையாண்டார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு நிறைய உள்ளன. எனவே மாற்றத்திற்கு அனைவரும் தயாராக இருங்கள்’’ என அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *