• Sat. Apr 20th, 2024

சன்பிக்சர்ஸ் விரும்பிக்கேட்ட படம் எதற்கும் துணிந்தவன்-இயக்குநர் பாண்டிராஜ்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் நேற்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில்
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ” சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டத்தை விட, படம் மிகச் சிறப்பாக இருக்கும். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு பிறகு – கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் மேடையேறி இருக்கிறேன். சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில், ‘எங்கள் சூர்யா அண்ணனை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள்’ என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தனர். அப்போது, ‘மாஸான கிராமிய பின்னணியிலான குடும்ப சென்டிமென்ட் கலந்த ஸ்கிரிப்ட் ஒன்று தயாராக இருக்கிறது’ என சமூக வலைதளத்தில் பதிலளித்தேன். அப்போது ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தேன். என்னுடைய சமூக வலைதள பதிவை கவனித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார், உடனடியாக சூர்யாவை சந்தித்து, அந்த படைப்பையும் எங்கள் நிறுவனம் சார்பில் உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டனர்.
ஒரு நல்ல திரைக்கதை, தனக்கான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து கொள்ளும் என்பார்கள். அந்த வகையில்தான் சூர்யா முதல் அனைவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்தனர். அவர்களும் தங்களது உழைப்பை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இப்படத்தின் கிளைமாக்சை மட்டும்  விமர்சனத்தில் குறிப்பிடவேண்டாம். அதனை படம் பார்க்கும் ரசிகர்களிடமே விட்டுவிடுங்கள். இதனை ஒரு அன்பு வேண்டுகோளாகத்தான் முன்வைக்கிறேன். ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *