


கோவையில் அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்பிக் கொண்டு இருந்த அரசுப் பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பூரில் இருந்து கோவை நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்புவதற்காக நின்றது. பணிமனை ஊழியர்கள் டீசல் நிரப்பியதும் ஓட்டுநர் பேருந்தை இயக்க தொடங்கினார். அப்போது திடீரென பேருந்திலிருந்து புகை வந்தால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தில் இருந்த பயணிகளை இறங்குமாறு கூற, பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர். மேலும் பயணிகளை அங்கு இருந்த பணிமனைக்கு வெளியே அனுப்பிய ஊழியர்கள், பேருந்தில் இருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டு இருந்த நிலையில், உடனடியாக பேட்டரியில் இருந்து செல்லும் இணைப்பை துண்டித்து பேருந்தை , டீசல் நிரப்பும் இடத்தில் இருந்து அப்புறபடுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயணிகளுடன் இருந்த பேருந்தில் டீசல் நிரப்பும் இடத்தில் திடீரென பேருந்தில் இருந்து புகை வந்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அந்த அரசு பேருந்தில் ஏற்கனவே கடந்த வாரம் “ஸ்டார்டிங் மோட்டார்” பழுதாகி இருந்த நிலையில், அதை மாற்றாமல் அப்படியே இயக்கியதால் தான் பேருந்தை ஸ்டார்ட் செய்யும் போது மோட்டாரில் இருந்து புகை வந்ததாக பணிமனை ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.

