விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மானகசேரி கிராமத்தில் சந்தனப்பாண்டி என்பவருக்கு சொந்தமான ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வெடி மருந்து கலவை செய்த போது ஏற்பட்ட வேதியல் மாற்றத்தால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது.

அப்போது அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காளிராஜன் என்பவர் 100% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.
அறையின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிவகாசியை சேர்ந்த சக்திவேல் (வயது55, )என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் அதே அறையில் வேலை பார்த்து வந்த கருப்பாயி, மகாலட்சுமி, பவானி ஆகிய மூன்று பெண்கள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தின் மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோதே
சிவகாசி அருகே அனுப்பன் குளத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்கு சொந்தமான வடிவேல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பேன்சீ ரக பட்டாசு தயாரிக்க தேவையான மணி மருந்து ரசாயன மூலப்பொருட்களை உலர்த்தும் பணியின் போது திடீரென வேதியியல் மாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் மணி மருந்து உளர்த்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் குன்னூரை சேர்ந்த ஈஸ்வரன் 56, என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தி உயிரிழந்தவரின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல குலத்தைச் சேர்ந்த ரதிதேவி கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கங்கர சேவல் கிராமத்தில் உள்ளது பட்டாசு கழிவுகளை ஆலைக்கு வெளியே கொளுத்தும் போது பலத்த காற்றினால் தீப்பொறி பட்டாசு ஆலைக்குள் விழுந்தது இரண்டு அறைகளில் இருந்த கருந்திரியில் தீ பற்றி எரிந்தது.
இதனால் இரண்டு அறைகள் சேதம் அடைந்தது.
அப்போது பட்டாசு ஆலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.








