ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை பிடித்து விசாரணை நடத்தியது. அவர்கள் படகில் மீன்கள் இல்லாததால் அவர்களை எச்சரித்து இலங்கை கடற்படை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் படகுகள், வலைகள், கருவிகள், மீன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்வதுடன் அரசுடமையாக்கும் நடவடிக்கைகளிலும் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 420 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்தனர். அங்கு இரண்டு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை வேகமாக படகில் இழுத்து வைத்துக்கொண்டு படகுகளுடன் சிதறி ஓடினர்.
அப்போது ஒரு விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டி வந்து மடக்கி பிடித்தனர். அந்த படகில் இருந்த 7 மீனவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் படகைக் காட்டி, இன்னும் நாங்கள் மீன் பிடிக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து அவர்களை இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து அந்த மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து விட்டு நேற்று ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர்.