• Fri. Apr 18th, 2025

ஸ்ரீஅலங்காரவல்லி, சௌந்தரநாயகி பங்குனி திருவிழாவின் திருக்கல்யாண உற்சவம்

ByAnandakumar

Apr 9, 2025

கரூரில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையாகிய சுவாமிகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய பசுபதீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கோவில் மண்டபத்தில் அலங்காரவல்லி, சவுந்திரநாயகியுடன் மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.