நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இம்மாதம் ஜூன் 10ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அதன் விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விமான சேவை எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முன்பதிவு செய்திருந்தவர்கள், மாற்று ஏற்பாடு செய்யாத நிலையில், ரயிலிலும் டிக்கெட் கிடைக்காமல், அதிக கட்டணம் செலுத்தி வேறு விமானங்களில் வரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது. இந்நிலையில் வரும் ஜூன் 10ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
சென்னையில் இருந்து சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள், நேற்று காலை விமான நிலையத்திற்கு பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனுமதிக்க மறுத்து, வரும் ஜூன் வரும் 10ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 10ம் தேதி வரை 120 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
