• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!

Byஜெ.துரை

Sep 23, 2023

‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இசை படைப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘என்னிடம் கேள்வி கேளுங்கள்’ என்றொரு அமர்வை தொகுத்து வழங்கினார். அதன் போது அவரது ரசிகர் ஒருவர், ‘உங்களது தந்தையுடன் இணைந்து பணியாற்றும் இசை படைப்பு குறித்த அப்டேட் ஏதாவது இருக்கிறதா? என அவரிடம் கேள்வி எழுப்பினார். அது குறித்த தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன், ” அது ஒரு மியூசிக்கல் ப்ராஜெக்ட். அது என்ன என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறோம். இது தொடர்பாக நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன்” என்றார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த பாடகருக்கான விருதினை கமல்ஹாசனுக்கு, ஸ்ருதிஹாசன் வழங்கிய போது மேடையில் இருந்த நடிகர் கமல்ஹாசன், இத்திட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து புதிய இசை படைப்பு ஒன்றில் பணியாற்றவிருப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த தருணத்திலிருந்து இந்த இசை படைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உச்சத்தில் இருக்கிறது.

ஸ்ருதிஹாசன் இதற்கு முன் ‘ எட்ஜ்’ , ‘ ஷீ இஸ் எ ஹீரோ’ எனும் இரண்டு சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது மூன்றாவது சுயாதீன இசை ஆல்பத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இது குறித்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.