மதுரையில் ஷேர் ஆட்டோ மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி. சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
மதுரை சீமான் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பொண்ணாங்கன். இவர் ஷேர் ஆட்டோ TN-58 /Z- 7975 என்ற எண்ணுள்ள ஷேர் ஆட்டோ வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 12ம் தேதி கருப்பாயூரணியில் இருந்து பொண்ணாங்கன் ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோரிப்பாளையத்திற்கு வந்தார். அப்போது பாண்டிக்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மீனாட்சி சுந்தரம்(32) என்பவர் கோரிப்பாளையத்திற்கு ஷேர் ஆட்டோவில் ஏறினார்.
பயணி மீனாட்சி சுந்தரம் ஆட்டோ டிரைவர் அருகே அமர்ந்திருந்த நிலையில் ஆட்டோ கோமதிபுரம் மகாத்மா தெரு அருகே வந்த போது, அந்த சந்திப்பில் அதிவேகமாக இருசக்கர வாகனம் வருவதை பார்த்த ஆட்டோ டிரைவர் சடன் பிரேக் போட்டதில் ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஆட்டோ டிரைவர் அருகே இருந்த மீனாட்சி சுந்தரம் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மீனாட்சிசுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து முன்னறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் அதே சந்திப்பில் மற்றொரு சொகுசு கார் சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மோதி விபத்துக்குள்ளான காட்சிகளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து இப்பகுதியில விபத்து ஏற்படுவதால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



