சிறுகுறு தொழில் முனைவோர் அமைப்பு மூலம் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அதன் தேசிய தலைவரான உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமனுக்கு சொந்தமான 3 இடங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சேலம் குற்றப்பிரிவு போலீசார் சோதனை – வங்கி காசோலைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக தகவல்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன், இவர் MSME என்ற சிறுகுறு தொழில் முனைவோர் அமைப்பின் தேசிய தலைவராகவும், செயலாளராக பஞ்சாப்-யைச் சேர்ந்த துஸ்வந்த யாதவ், தமிழ்நாடு தலைவராக நடிகை நமிதாவின் கணவன் வீரேந்திர சௌத்ரி உள்ளிட்டோர் இருந்து வருவதாகவும், இவர்கள் தன்னிடம் சுமார் 41 லட்சம் பண மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த கோபலசாமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையிலும், உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் தனது கார் மற்றும் விசிடிங் கார்டுகளில் அரசின் அசோக முத்திரை மற்றும் கொடியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக கடந்த மாதம் 2ஆம் தேதி முத்துராமன் மற்றும் துஸ்வந்த் யாதவ் என்ற இருவரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக இன்று உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமனின் வீடு, அவரது அலுவலகம், தோட்டம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சேலம் மாநகர குற்றப்பிரிவு மாநகர துணை ஆணையர் சூர்யா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.,
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் வங்கி காசோலைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.