• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

துபாய் எங்கள் சொந்த மண் அல்ல- விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா பதிலடி

ByP.Kavitha Kumar

Mar 4, 2025

துபாய் எங்கள் சொந்த மண் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மைதானம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது. அங்கு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளைத் தோற்கடித்த இந்தியா அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது.

முன்னதாக, துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது என்றாலும் அதைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் விமர்சனம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ஆஸ்திரேலியா மிகவும் வலிமையான எதிரணி. நாங்கள் கடைசி மூன்று போட்டிகளில் எப்படி விளையாடினோமோ அதே போலவே அரையிறுதிப் போட்டியிலும் விளையாட வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆட்டத்தின் நடுவே சில பதற்றமான சூழல்களும் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் போட்டிகள் அவ்வாறுதான் இருக்கின்றன. கண்டிப்பாக அழுத்தம் என்பது இரண்டு அணிகளுக்குமே இருக்கும். ஒரு அணியாக, ஒரு வீரராக, பேட்டிங் குழுவாக, பந்துவீச்சு குழுவாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆஸ்திரேலிய அணி பல ஆண்டுகளாக சிறந்து விளங்குகிறது. இதனால் அவர்கள் இந்த போட்டியில் போராடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒவ்வொரு முறையும், ஆடுகளம் வெவ்வேறு சவால்களைக் கொடுக்கிறது. நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும், ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. துபாய் எங்கள் சொந்த மண் இல்லை. நாங்கள் இங்கு அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை. இது எங்களுக்கும் புதிதுதான். இங்கு நான்கைந்து ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரையிறுதியில் எந்த ஆடுகளத்தில் விளையாட போகிறோம் என்பது தெரியாது. ஒவ்வொரு ஆடுகளத்திலும் வெவ்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எனவே, இந்த ஆடுகளத்தில் என்ன நடக்கும், எது நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் உதவியாக இருந்தால் போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

துபாயில் உள்ள ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதை இரு மாதங்களாக இங்கு நடைபெற்ற போட்டிகளின் வாயிலாக அறிந்தோம். இதன் அடிப்படையிலேயே அணியை தேர்வு செய்தோம். மெதுவாக வீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் உதவியாக இருப்பார்கள். 5 முதல் 6 நாட்களுக்கு முன்பே துபாய் வந்து பயிற்சிகள் மேற்கொண்டதும் இங்குள்ள சூழ்நிலையை தகவமைத்துக் கொள்ள உதவியது” என்றார்.