சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்றன.

சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நாகமங்கலம் முக்கிய தெருக்களில் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். இப் பேரணியை விக்கிரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பான கானா பாடலை இனிமையாக பாடினர். தொடர்ந்து, ஒன்பதாம் வகுப்பு மாணவி சசிகா சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
மேலும், சாலை பாதுகாப்பு குறியீடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறியீடுகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு நிகழ்வுகள் முடிவுற்றன.
பள்ளி தலைமையாசிரியர் மு. ஜெயராஜ் வழிகாட்டுதலின் கீழ், சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்களான சமூக அறிவியல் ஆசிரியர்கள் கு. தமிழ் இலக்கியா மற்றும் சு. செல்வராணி ஆகியோர் இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் விக்கிரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து பரிசுகள் வழங்கினர்.










