குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் இது மிகவும் மன வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்று தமிழகம் முழுவதும் குரூப்2, 2A தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. காலை மற்றும் மதியம் இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு காலை தேர்வுகள் துவங்கின. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் காலை தேர்வை எழுதி வந்தனர்.
அந்நிலையில் சென்னையில் சில தேர்வு மையங்களில் நடைபெற்ற கோளாறுகள் காரணமாக தேர்வர்கள் குழப்பமடைந்து சாலை மறியலில் ஈடுப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்வு இன்று ரத்து செய்யப்பட்டு வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் கோவையில் இம்மையத்திக் தேர்வு ரத்து என்ற சுற்றறிக்கை கிடைப்பதற்கு தாமதம் ஆனதால் சுமார் 20 நிமிடங்கள் வரை தேர்வு தொடர்ந்தது. பின்னர் சுற்றறிக்கை வந்தவுடன் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வர்கள் பாதியிலே தேர்வை நிறுத்திவிட்டு வெளியேறினர். மேலும் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் கோவையில் இந்த மையத்தில் முன்கூட்டியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில் இந்த தேர்விற்காக பல மாதங்கள் படித்து தயாராகி தேர்வை எழுதி வந்த நிலையில் திடீரென தேர்வு ரத்து என்று கூறியது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்தனர்.










