நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா நிலை குறித்து ஆளுநர் மாளிகை பதிலளித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக நீடித்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வு திரும்பப் பெற வலியுறுத்தி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதன் மீது எந்த நடவடிக்கையும் தமிழக ஆளுநரால் எடுக்கப்படவில்லை. இதையடுத்து தற்போது தமிழகத்தில் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதா குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள ஆளுநர் மாளிகை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதா தற்போது பரிசீலனையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காலதாமதம் ஏற்படுத்தக்கூடாது .
நீட் தேர்வை திரும்பப்பெறும் மசோதாவுக்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறும் வகையில், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் , அதைத் தொடர்ந்து ஜனவரி 30-ஆம் தேதி கல்வியாளர்கள் உண்ணாவிரதம் நடத்துவது குறித்தும், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் காலவரையற்ற தனிநபர் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.