தமிழக சட்டப்பேரவையில் இன்று மத்திய பாஜக அரசு கொண்டு வர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழியவுள்ளார்.
2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து நரேந்திர மோடி பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்படுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற உள்ள சட்டப்பேரவையில் மற்றொரு தீர்மானமாக 2026ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது.