பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஆனால் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
பீகாரில் சமீப காலமாக, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
பீகாரில் 2020 சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. அத்தேர்தலில் பாஜக 77; ஜேடியூ 45 இடங்களில் வென்றன. எனினும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றார். பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் நேற்று அறிவித்தார். அதன்பின்னர் தமது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
பாஜகவை விட்டு விலகி வந்த ஜேடியூவுக்கு ஆர்ஜேடி,காங்கிரஸ்,இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. இதன்பின்னர் நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து மீண்டும் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனிடையே பாட்னாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார்.
நேற்று ராஜினாமா… இன்று மீண்டும் முதல்வர்
