விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் மெயின் ரோட்டில் மழை நீர் கடந்து செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது.

இதன் வழியாக விளாமரத்துப்பட்டி, சூரார்பட்டி, வெம்பக்கோட்டை, அக்கரைப்பட்டி, காமராஜர்நகர்,சங்கரபாண்டியாபுரம், ஜெக வீரம்பட்டி, ஏழாயிரம் பண்ணை, மஞ்சள் ஓடைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்து செல்லக்கூடிய பிரதான சாலையில் இப்பாலம் அமைந்துள்ளது. மேலும் தரைப்பாலம் அமைக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து இதனை பராமரிக்கப்படாததால் மேற்பகுதியில் பெரிய பள்ளம் விழுந்துள்ளது. தரைப்பாலம் அருகில் தெருவிளக்கு வசதியும் செய்த தரப்படவில்லை.
இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



