மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் கிராமத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளது. இதனை குத்தகையாளர்கள் முறையாக பராமரித்து அதற்கான வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், ஒரு சிலர் வாடகை மற்றும் கோயிலுக்கு உரிய வரிபாக்கியை செலுத்தாமல் இருந்த காரணத்தினால் கோவில் நிர்வாகத்தினர் வீடு உரிமையாளர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகாலம் நிலுவையில் இருந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணையின் மூலம் கோவில் நிர்வாகத்தினர் வீட்டை கைப்பற்றி உரிய வாடகை வசூல் செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் குடியிருப்பவர்களை வெளியேற்றிவிட்டு குடியிருப்பு வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை குடியிருந்து வரும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தி உரிய வாடகை மற்றும் மின்சார கட்டணம் வரிபாக்கியை செலுத்திட வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாடகை மற்றும் வரிபாக்கிகளை தொடர்ந்து செலுத்திவந்த நிலையில், இரண்டு வீடுகளில் குடியிருந்த நபர்கள் உரிய முறையில் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்திற்கு சாதகமாக வழக்கில் தீர்ப்பு வந்ததை அடுத்து இந்தவீட்டில் குடியிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு வீட்டை இடித்து அப்புறப்படுத்தினார்கள். மேலும், கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு உரிய வாடகை வரி பாக்கிகள் மற்றும் மின்சார கட்டணங்களை முறையாக செலுத்தி வர வேண்டும் என்றும் அறிவிப்பு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.