தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தாயுமானவர்” திட்டத்தின் கீழ், விருதுநகரில் முதியோர்களுக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விருதுநகர் தந்திமரத் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முதியோர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடை ஊழியர்கள் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

இது குறித்து நியாயவிலைக் கடை எண் 6-ல் பணிபுரியும் ஊழியர் ராஜேஸ்வரி கூறுகையில், “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, தாயுமானவர் திட்டத்தின் மூலம் முதியோர்களைக் கண்டறிந்து, அவர்களின் இல்லம் தேடிச் சென்று பொருட்களை வழங்கி வருகிறோம். ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 60 வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்கிறோம். இதன் மூலம் முதியோர்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்கள் வாங்க வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இல்லம் தேடி வரும் இந்தச் சேவையால் தந்திமரத் தெரு பகுதியில் உள்ள முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.










