திருமங்கலம் அருகே சின்ன உலகாணி கிராமத்தில் மழைநீர் விவசாய நிலங்களை கடந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து விடுகிறது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து அப்பகுதியை கடந்து செல்ல கழிவு நீர் கால்வாய் இல்லாததால் விவசாய நிலங்களிலும் வீடுகளுக்கு அருகிலும் தேங்கி நிற்பதால் விவசாய நிலங்களில் பயிர்கள் கருகி அழியும் அபாய நிலை உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதனால் கழிவு நீர் கால்வாய் அமைத்து தரக்கோரியும் தற்போது தேங்கியுள்ள நீரை அகற்ற கோரியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.
தகவல் அறிந்து வந்த கூடக்கோவில் போலீசார் விவசாய நிலங்களில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது மேலும் சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தொடர்ந்து கிராம பொதுமக்கள் ஓடையை காணவில்லை எனவும் ஓடையை கண்டுபிடித்து தருமாறும் கூடக்கோவில் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து நாளை கள்ளிக்குடி வட்டாட்சியருக்கும் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.