புதுச்சேரி மாநிலத்தில் கோடைக்காலங்களில் கடற்கரை பகுதி, பூங்காக்கள், புதுச்சேரியின் முக்கிய வீதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மஞ்சள் கொன்றை மலர்கள் அதிகளவு பூத்து கண்ணை கவரும் வகையில் இருப்பதுடன், மலர் வண்ணக் கோலங்களாகவும் காட்சியளிப்பது ரம்மியமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடற்கரை சாலை, சட்டப்பேரவை வளாகம், பாரதி பூங்கா பகுதிகளில் மட்டுமல்லாமல் காந்தி வீதி, புஸ்ஸி வீதி, மிஷன் வீதி, ஆம்பூர் சாலை பகுதிகளில் அதிகளவு மஞ்சள் கொன்றை மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கி வருகின்றது. இந்த மஞ்சள் கொன்றை மலர்கள் அதிகளவு பூத்துள்ளதால் சாலைகள் மஞ்சள் வண்ணமாகக் காட்சி அளித்து வருகின்றது. இதன் நறுமணம் மற்றும் கொட்டிக்கிடக்கும் பூக்களின் அழகால் புதுவையின் பல்வேறு வீதிகள் வண்ண கோலங்களாக காட்சி அளிக்கின்றது. மேலும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்கச் சுற்றுலா பயணிகள் மஞ்சள் கொன்றை மலர்கள் அதிகம் உள்ள மரங்களின் நிழல்களில் ஓய்வு எடுத்தும் வருகின்றனர்.