• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ByKalamegam Viswanathan

Dec 27, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்..,

ஏற்கனவே மேலக்கால் தேனூர் செல்லும் சாலையிலும் மேலக்கால் கொடிமங்கலம் செல்லும் சாலையிலும், இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், மேலும் ஒரு டாஸ்மாக் கடை மேலக்கால் பகுதியில் அமைப்பது இங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாக உள்ளது. ஏற்கனவே மேலக்கால் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளால் தினசரி பல்வேறு வகைகளில் சமூக விரோத செயல்களும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகமலை அடிவாரத்தில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைப்பது சட்ட ஒழுங்கு பிரச்சனையை மேலும் கேள்விக்குரியதாக்கிவிடும். இந்த பகுதியில் ஏற்கனவே குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபானை கடை அமைத்தால் குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அருகிலேயே பள்ளிவாசல் மற்றும் கணவாய் கருப்புசாமி கோவில் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் இருக்கும் நிலையில், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பும் கேள்விக்குரியதாக மாறிவிடும். ஆகையால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய நிலை ஏற்படும் என கூறினர்.