




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் 27 மஸ்தூர் பணியாளர்கள் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

டெங்கு காலம் மட்டுமல்லாது, கொரோனா மற்றும் மழை மற்றும் கொசு உற்பத்தி காலத்தில் ஒவ்வொரு வீடாக சென்று தேங்கியுள்ள தண்ணீரை சோதனையிடுவது, மருந்து தெளிப்பது என முன்கள தூய்மை பணியாளர்களாக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த மஸ்தூர் பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையான பணி வழங்காமல், பணி நீக்கம் செய்துள்ளதாகவும், ஊதிய நிலுவை -யை உடனடியாக வழங்க கோரியும், முறையான பணி வழங்க வலியுறுத்தி இன்று உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய சூழலில், மஸ்தூர் பணியாளர்களுக்கு தூய்மை பணியோடு, நகராட்சியின் பல்வேறு பணிகளையும் செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்து வருவதாகவும், தற்போது முறையான பணி, ஊதிய நிலுவை வழங்காமல் பணி நீக்கம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு தினங்களில் ஊதிய நிலுவையை வழங்குவதோடு, முறையான பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

