வாடிப்பட்டி ஒன்றிய குழு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பாக ஏழை எளியோருக்கு குருவித்துறை, ராயபுரம், சோழவந்தான் உள்பட்ட பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், கண்ணுடையாள்புரம் கிராமம் அருகே விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க கோரியும் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் குடியேறும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் கந்தவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் விவேக், லோகநாதன், செல்வகுமார், வீரத்தேவர் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் அலுவலகம் முன்பாக அடுப்பு விறகுவைத்து சமையல் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் போஸ், பாண்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



