விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்வெம்பக்கோட்டை ஒன்றியம் பி. திருவேங்கடபுரம் ஊராட்சியை சேர்ந்தது பழையாபுரம் கிராமம். இக்கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்ததால் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததன் பேரில். புதிய மேல்நிலை தொட்டி அமைக்க காளியம்மன் கோவில் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணி தொடங்கிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் புதிய மேல்நிலை தொட்டி அமைத்தால் காளியம்மன் கோவில் திருவிழா கொண்டாடுவதற்கு இடையூறாக இருக்கும்.

ஆகையால் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடத்தில் கட்டிட பணி தொடங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஏராளமானோர் திரண்டு வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன், மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் அருண் பாண்டியன், ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கட்டிடப் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.










