சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசு அதிகரித்து 105 ரூபாய் 43 காசாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 34 காசு அதிகரித்து 101 ரூபாய் 59 ஆக விற்பனையாகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் கையிருப்பினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 வாரங்களில் இல்லாத அளவு குறைந்து பீப்பாய்க்கு 82 டாலராக உள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வினியோகம் தொடங்கும் அறிகுறி ஏற்பட்டுள்ளதாலும், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பும் விலை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இவ்விலை குறைவு தொடரும் பட்சத்தில் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. இதற்கிடையே கச்சா எண்ணெய் விலையை குறைப்பதற்காக சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.