• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முட்புதரில் மாட்டிக் கொண்ட மானை மீட்ட மக்கள்..,

ByKalamegam Viswanathan

May 29, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி நகர் குடியிருப்பு பகுதியில் இன்று திடீரென இரண்டு வயது புள்ளிமான் ஒன்று புகுந்தது குடியிருப்புகள் புகுந்த மானை பார்த்து அப்பகுதி மக்கள் கூச்சலிட மானும் மக்களை பார்த்து அச்சத்தில் வீட்டுக்கு வீடு தாவி முட்புதரில் மாட்டிக் கொண்டது.

உடனே திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுவுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஸ்நேக் பாபு அப்பகுதி மக்களின் உதவியுடன் முட்புதரில் சிக்கி இருந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது மான் முயலுக்காக வைத்திருந்த கன்னி காலில் பட்டு காயம் ஏற்பட்டதோடு வாயிலும் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை வனத்துறை அதிகாரிகள் மானை பத்திரமாக மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மான் குணமடைந்ததும் வனப்பகுதியில் விட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம் அடுத்த சாப்டூர் வனப்பகுதியில் எண்ணற்ற புள்ளி மான்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது தண்ணீர்க்காக ஊருக்குள் வருவதும் அப்படி வரும்போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழப்பதும் தொடர்கதையாக இருப்பதால் மக்கள் காட்டுக்குள் தண்ணீர் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வனத்துறையிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மான் குடிநீர் தேவைக்காக வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.