மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு பெருவிழாவை காண வந்த
பக்தர்களுக்கு தண்ணீர், மோர், குளிர்பானம் வழங்கி உபசரித்த இஸ்லாமியர்கள். மதம் கடந்த இந்த நேசத்தை பக்தர்கள் பெரிதும் வரவேற்றனர்.

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவை நேரில் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையை நோக்கி வந்தனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் பல்வேறு வழித்தடங்கள் வழியாக மதுரை மாநகருக்குள் திரண்ட நிலையில், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. வெயில் மற்றும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருந்து குடமுழுக்கு விழாவைக் காண வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் குடிநீர் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதம் கடந்த மனிதநேயம்

இந்தச் சூழலில் மதுரை தெற்குவாசல் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவைக் காண வந்த பக்தர்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதம் கடந்து அன்புடன் உபசரித்தனர். பக்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் குடிநீர் பாட்டில்கள், மோர், குளிர்பானங்கள், ரோஸ் மில்க் உள்ளிட்ட பல்வேறு பானங்களை அவர்கள் வழங்கினர்.
கோவிலை நோக்கி நடந்து சென்ற பக்தர்களை அன்புடன் அழைத்து, “தண்ணீர் குடித்துச் செல்லுங்கள்”, “மோர் வாங்கிக்கொள்ளுங்கள்” எனக் கூறி பானங்களை வழங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பக்தர்களுக்கு பானங்களை வழங்கிய காட்சி இந்து பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
முகம் மலர்ந்த பக்தர்கள்

குடமுழுக்கு விழாவைக் காணும் ஆர்வத்தில் நீண்ட தூரம் பயணித்து வந்த பக்தர்கள், வழியில் கிடைத்த இந்த மனிதநேய உதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் தண்ணீர், மோர் மற்றும் குளிர்பானங்களை வாங்கிப் பருகியபடி தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.
ஒருபுறம் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவைக் காண பக்தர்கள் பெருந்திரளாக திரண்டிருந்த நிலையில், மறுபுறம் அவர்களுக்கு வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவித வேறுபாடும் இன்றி உதவிக்கரம் நீட்டிய காட்சி, “மதம் வேறாக இருக்கலாம்; மனிதநேயம் ஒன்றுதான்” என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது.
மதுரையின் நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய தருணம்

மதுரை என்பது கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என பல்வேறு மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் இணைந்து வாழும் பண்பாட்டுச் சூழலைக் கொண்ட நகரமாகும். அந்த வகையில், மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு போன்ற ஒரு முக்கியமான இந்து சமய நிகழ்வில், இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கி உபசரித்த சம்பவம் மதுரையின் சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
வழிபாடு அவரவர் நம்பிக்கை; மனிதநேயம் அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் இந்தக் காட்சிகள், குடமுழுக்கு விழாவுக்கு வந்த பக்தர்களிடமும் மதுரை மக்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழா ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், கோவில் வாசலுக்கு வெளியே நடைபெற்ற இந்த மதம் கடந்த மனிதநேய உபசரிப்பும் மதுரையின் மற்றொரு சிறப்பான முகத்தை வெளிப்படுத்தியது.



