• Thu. Apr 25th, 2024

வேற்றுகிரக வாசிகளால் மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்ளும் வடக்கு அயர்லாந்து மக்கள்..!

Byவிஷா

Dec 28, 2021

வடக்கு அயர்லாந்தில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு வரை, மர்மமான வகையிலான காட்சிகள் தோன்றியதாக 8 புகார்கள் வந்த நிலையில், இந்த முறை ஒரே ஆண்டில் மர்மான சம்பவங்கள் சுமார் 6 பதிவாகியுள்ளன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயால் உலகமே கலக்கமடைந்துள்ள நிலையில், வேற்றுகிரகவாசிகள் மற்றும் யுஎஃப்ஓ காரணமாக வடக்கு அயர்லாந்து நாடு மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்கிறது.


ஜனவரி 17 அன்று, டவுன்பேட்ரிக் பகுதியில் இருந்து வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி கூறினார். இதற்குப் பிறகு, மே மாதத்தில், மாகாபெரி பகுதியில் ஹெலிகாப்டர் காணப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளை ஒளி காணப்பட்டது எனவும் உள்ளுரில் வசிக்கும் நபர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நியூடவுன்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவியில் ஒரு வித்தியாசமான உருவம் வருவது போன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. சென்டர்ஃபீல்ட் பகுதியில் டோம் வடிவிலான ஒரு பொருளை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் எட்டு இடங்களில் இருந்து வெளிச்சம் தோன்றுவதைக் காண முடிந்தது.


ஜூன் மாதத்திற்குப் பிறகு, உள்ளுரில் வசிக்கும் நபர் ஒருவர் தனது படுக்கையறையில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக காவல்துறைக்கு புகார் கொடுத்தார். ஆனால் இது எந்த சர்வதேச செய்திகளிலும் விவாதிக்கப்படவில்லை. அக்டோபரில், வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டதாகக் கூறிய ஒருவரை காவல் துறை கைது செய்தது.


கடந்த மாதம் நவம்பரில், வானத்தில் ஒரு வித்தியாசமான பிரகாசமான ஒளி காணப்பட்டதாகவும், அதனால், தான் மிகவும் பீதி அடைந்ததாகவும் உள்ளூரில் வசிக்கும் நபர் ஒருவர் காவல்துறையிடம் கூறினார்.


வடக்கு அயர்லாந்தின் காவல் துறையை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், யுஎஃப்ஒக்கள், வானத்தில் விசித்திரமான ஒளி, வேற்றுகிரகவாசிகள் பற்றி மக்கள் கூறிய இந்த வழக்குகள் குறித்த தகவல்களை காவல் துறை பராமரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *