நிம்மதி…
”தன்னிடம் இருப்பதே போதும்…!” என்ற எண்ணம் வராதவரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டேதான் இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் மனநிறைவு,, நிம்மதி அடைவது இல்லை.
நம்மிடம் இருப்பதை கொண்டு மனநிறைவு காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும் போதாதுதான்.
ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து, ”அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம்கூட நிம்மதியே இல்லை, என்ன காரணம் என்பது புரியவில்லை…!?” என்று கேட்டார்.
அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை. அங்கே அருகில் விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார். அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.
அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது. மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார். தன்னுடைய ஒருகையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது. ஆனால்!, ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக் கண்டு அந்தக் குழந்தை அழுதது.
இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த அறிஞர்,
“இந்தக் குழந்தையை பார்த்தாயா…? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா…?” என்றார்.
அதே போன்றுதான் “போதும்” என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் சிக்கல் வாரது. நிம்மதி கிடைக்கும். தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்த பணக்காரருக்கு புரிந்து விட்டது.
நமது முன்னோர்கள் கூறிய மொழி ஒன்று “இருப்பதை விட்டு, இல்லாததற்கு பறக்காதே என்று.” நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது நாம் நிம்மதியை இழக்கக் கூடிய சூழல் உருவாகிறது.
எனவே, நம்மிடம் உள்ளதை வைத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!