சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியில் ரூ.3.69 கோடியில் கட்டப்பட்ட வாரச் சந்தையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிவகங்கை நகராட்சி 27 வார்டுகள் கொண்ட முதல் நிலை நகராட்சி ஆகும். இதன் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 40,403 மற்றும் தற்போதைய மக்கள் தொகையானது 43,890 ஆகும். இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 6.97 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்நகராட்சிக்கு சொந்தமான 4 -ஆவது வார்டில் உள்ள வாரச்சந்தை புதிதாக அமைப்பதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்(2022-23) தின் கீழ் மதிப்பீட்டுத் தொகை ரூ.3.69 கோடிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக அனுமதியின்படி ஒப்பந்தப்புள்ளிவிடப்பட்டு, அனைத்து பணிகளும் முழுவதும் முடிக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சித்தலைவர் சி.எம். துரைஆனந்த் கூறுகையில், புதிய வாரச்சந்தைப் பணி, 7,115 சதுர மீட்டர் (1.76 ஏக்கர்) பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 172 காய்கறிகடைகள், 12 மீன் கடைகள் , ஒரு காவலர் அறை, தண்ணீர் வசதிக்காக ஆழ்குழாய் கிணறும் அமைக்கப் பட்டது. சந்தையின் உட்புறப் பகுதி சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள 20 மின் கம்பங்கள் மூலம் எல்இடி விளக்குகளும் மற்றும் கடைகளின் உட்புறத்தில் 48 எல்இடி விளக்குகளும் அமைக்கப்பட்டு போதிய அளவில் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆண்களுக்கு 5 புதியகழிப்பறைகளும் பெண்களுக்கு 8 கழிப்பறை களும், 4 சிறுநீர் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தரைத் தளத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.








