• Mon. Mar 17th, 2025

இருமொழி கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் தான் வெற்றி பெறும் …அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்

கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-சாத்தூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக்குப்பின் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் அனைத்தையும் இந்த மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டதால் அதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்,கோடைகாலம் வருவதால் குடிநீர் பிரச்சனை வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குப்பைகளை முறைப்படி அகற்றவும் தெருவிளக்குகளை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்.மும்மொழிக்கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,அண்ணா காலத்திலிருந்து இருமொழி கொள்கையைத்தான் தமிழகம் ஏற்றுள்ளது என்றும் இருமொழிக்கொள்கையை தான் திமுக அரசு பின்பற்றி வருகிறது அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இருமொழிக்கொள்கையை ஆதரிக்கும் கட்சிதான் அமோக வெற்றி பெறும் என்றார்.