தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் அருள்நேசன் (60). மத போதகர். இவர் நேற்று மாலையில் விளாத்திகுளம் பஸ் நிலையத்திலிருந்து மொபட்டில் சிதம்பரபுரம் நகருக்கு சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர் மீது பஸ் சக்கரம் ஏறியதில் தலை, கை நசுங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் குறுக்குச்சாலை வள்ளிநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பெருமாள்சாமி (44) மீது வழக்குப்பதிவு செய்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.”